Breaking News

தமிழகத்தில் 9,10 வகுப்புகளில் இடைநிற்றல் விகிதம் 100% உயர்வு! - அதிரவைக்கும் புள்ளிவிவரம்


     தமிழகத்தில், பள்ளி இடைநிற்றல் சதவிகிதம் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் கடந்த மூன்றாண்டுகளில் 100 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்திருக்கிறது. பள்ளிகளில் இடைநிற்கும் மாணவர்கள்குறித்து நாடாளுமன்ற மக்களவையில், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி-க்களான சுதாகர் துக்காராம் ஷ்ரங்கரே மற்றும் பி.பி.சௌத்திரி ஆகியோர் கேள்வி எழுப்பினர். எம்.பி-க்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், ``வறுமை, பொருளாதாரமின்மை, குழந்தைகளின் மோசமான உடல்நிலை, மாற்றுத்திறன் மற்றும் பெற்றோர்கள் கல்வியை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதாதது போன்ற காரணங்களால், அவர்களால் படிப்பைத் தொடர முடிவதில்லை" என்று கூறியுள்ளார்.


கல்வி

        மனிதவள மேம்பாட்டுதுறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி,  தமிழகத்தில் உயர்நிலை பள்ளிப் படிப்பைப் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றல், 2015-2016-ம் கல்வி ஆண்டில் 8.1% ஆக இருந்தது. 2016-2017 -ம் கல்வி ஆண்டில் இந்த விகிதம் 10% ஆக உயர்ந்தது. 2017-2018-ம் கல்வி ஆண்டில் 16.2% ஆக அதிகரித்தது. 2015-2016-ம் கல்வி ஆண்டை ஒப்பிடுகையில் இது 100 சதவிகிதம் அதிகம் ஆகும். தமிழகத்தில், தொடக்கநிலை அளவில் மாணவர்கள் இடைநிற்றல் 2017-2018 -ம் கல்வி ஆண்டில் 5.9% ஆக உள்ளது.
ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதத்தைக் குறைத்துவரும் நிலையில், கல்வியில் முன்னோடியாகத் திகழும் மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில், 9 மற்றும் 10-ம் வகுப்பு அளவில் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


    இதுதொடர்பாக மூத்த கல்வியாளர் பேராசிரியர் பிரபா கல்விமணி நம்மிடம் பேசியபோது, ``இந்தப் புள்ளிவிவரங்கள் மிகப்பெரிய அதிர்ச்சியைத் தருகின்றன. அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியைக் கொண்டுவந்தது முக்கியமான பிரச்னையாக உள்ளது. மற்ற நாடுகளில் இரண்டாவது மொழியை 10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது இல்லை. ஆனால், நமது நாட்டில் தாய் மொழியை கற்றுக்கொள்வதற்கு முன்பே இரண்டாவது மொழியை சொல்லித்தருகின்றனர்.




பேராசிரியர். பிரபா கல்விமணி


      அரசுப் பள்ளிகளில் யாருடைய கவனிப்பும் இல்லாத குழந்தைகள்தான் சுய முயற்சியில் படிக்கிறார்கள். அவர்களுக்கு மற்ற மொழியை ஆரம்பத்திலேயே கற்றுக்கொடுக்கும்போது கல்வியிலிருந்து விலகும் மனநிலை ஏற்படுகிறது. குறிப்பாக, இந்தக் காரணத்தால் பழங்குடி மற்றும் ஆதிவாசி மக்கள் அதிகமாக படிப்பை பாதியிலேயே விட்டுவிடுகின்றனர். ஏழ்மை, பொருளாதாரம் போன்ற பல்வேறு பிரச்னைகள் காரணமாக இருந்தாலும், பிரதான காரணமாக மொழிதான் இருக்கிறது. இடையிலேயே படிப்பை விட்டுவிட்டால் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவந்து படிக்கவைப்பது கஷ்டம். எனவே, மாணவர்களின் கல்விக்காக ஆசிரியர்கள் உட்பட பலரும் முன்வந்து பேச வேண்டும்" என்றார்.

No comments