Breaking News

கல்லூரியில் பயிலும் பெண்களுக்கு மகப்பேறு காலகட்டத்தில் வருகைப்பதிவு தளர்வு: மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

   கல்லூரியில் பயிலும் திருமணம் ஆன பெண்களின் மகப்பேறு காலகட்டத்தில் அவர்களின் வருகை பதிவு விதிமுறைகளை தளர்த்துவது குறித்து யுஜிசி, ஏஐசிடிஇ உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் குஷ் கல்ரா டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    கல்லூரிகளில் பயிலும் திருமணம் ஆன பெண்கள் தங்களின் மகப்பேறு காலகட்டத்தில், அதாவது பிரசவத்துக்கு முன், பின் என இரு காலகட்டத்தில் வகுப்புகளுக்கு வரமுடியாத சூழ்நிலை உள்ளது. அப்போது வருகை பதிவு குறைந்து, பருவத் தேர்வு எழுத முடியாமல் அவர்களின் கல்வி தடைபடுகிறது. மகப்பேறு நலச் சட்டத்தின் கீழ்பணிபுரியும் பெண்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், கல்வி நிறுவனங்களில் படிப்பவர்களுக்கு வழங்கப்படவேண்டும். அவ்வாறு செய்யாமல் இருப்பது பெண்கள் நல உரிமைகளில் பாகுபாடு காட்டப்படுதாக அர்த்தமாகும்.

    எனவே, மகப்பேறு காலக்கட்டத் தில் பெண்களுக்கு வருகைப்பதிவு விதிமுறைகளை தளர்த்த தேவையான நடவடிக்கையை செய்ய பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஏஐசிடிஇ), இந்திய மருந்தியல் கவுன்சில் (பிசிஐ), இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) ஆகிவற் றுக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

   இந்த மனு மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமைநீதிபதி டி என் படேல், நீதிபதி சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, நீதிபதிகள் இதுதொடர்பாகமுடிவு எடுக்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், யுஜிசி, ஏஐசிடிஐ, பிசிஐ,எம்சிஐ ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், இந்தவழக்கு மீதான அடுத்த விசாரணை மே 28-ம் தேதி வரும்போது துறை சார்ந்த விளக்கம் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


No comments