Breaking News

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்தால் வாழ்நாள் தடை

     எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், அரசு தேர்வுகள் இயக்குனர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தேர்வர் மற்றொரு தேர்வரை பார்த்து காப்பி அடித்தாலோ அல்லது தேர்வு அறையில் இருந்தோ, வெளியில் இருந்தோ வேறொருவரிடம் இருந்து உதவி பெற்றாலோ அவர் அந்த தேர்வில் தகுதிநீக்கம் செய்யப்படுவதுடன், ஓராண்டு தேர்வு எழுத தள்ளிவைக்கப்படுவார்.

     தடை செய்யப்பட்ட ஆவணங்களை கொண்டு காப்பி அடித்தால், அந்த பகுதிக்கான மதிப்பெண் ரத்து செய்யப்படுவதோடு, தேர்வர் அடுத்த 2 ஆண்டுகள் தேர்வுகளை எழுதவும் தடைசெய்யப்படுவர். ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த தேர்வர் தகுதிநீக்கம் செய்யப்படுவதுடன், வாழ்நாள் தேர்வு எழுதவும் தடைவிதிக்கப்படும். வினாத்தாளை முன்கூட்டியே வெளியிட்டது கண்டறியப்பட்டால், தேர்வுக்கான தகுதிநீக்கம் செய்யப்படுவதோடு, 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுதவும் தடைவிதிக்கப்படும்.

     விடைத்தாளில் வரிசை எண்ணை மாற்றி குறிப்பிட்டு கொடுத்தாலோ, மற்ற தேர்வரின் விடைத்தாள்களை மாற்றிக்கொள்வது கண்டறியப்பட்டாலோ அவர் தகுதிநீக்கம் செய்யப்படுவதுடன், 5 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாமல் தள்ளிவைக்கப்படுவார் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments