Breaking News

2ம் இடத்தில் இருந்து 8ம் இடத்துக்கு கல்வித்தரம் சென்றதுதான் உயர்வா? பேரவையில் காரசார விவாதம்

2ம் இடத்தில் இருந்து 8ம் இடத்துக்கு கல்வித்தரம் சென்றதுதான் உயர்வா? பேரவையில் காரசார விவாதம்

   தமிழகத்தில் கல்வியின் தரம் 2ம் இடத்தில் இருந்து 8ம் இடத்துக்கு சென்றதுதான் கல்வித் துறையின் உயர்வா என்று பேரவையில் அதிமுக- திமுக இடையே காரசார விவாதம் நடந்தது. தமிழக சட்டப் பேரவையில் நேற்று பள்ளி மற்றும் உயர் கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு திருக்கோவிலூர் பொன்முடி (திமுக) பேசியதாவது: வரும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்தே கல்வித்துறைக்கு இந்தாண்டு கூடுதலாக ரூ.5,423 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கருதுகிறேன். இவ்வளவு நிதி ஒதுக்கியது வரவேற்க்கத்தக்கது என்றாலும், கல்வி துறை மாநில பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு சென்ற நிலையில், இப்போது மத்திய அரசின் பட்டியலுக்கு சென்றுவிடும் அச்சம் எழுந்துள்ளது. 2018 ஜூலை 17ம்தேதி அன்று மத்திய கல்வி அமைச்சர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாடும் போது, மத்திய அரசு சார்பில் மாநிலங்களில் கல்லூரிகள் தொடங்க ரூ.1700 கோடி ஒதுக்க இருப்பதாக கூறியிருக்கிறார்.


    இங்கு கல்லூரிகள் அமைக்க தமிழக அரசுக்குதான் உரிமை உள்ளது. மத்திய அரசு தொடங்குவோம் என்று கூறுவது ஆக்கிரமிக்கும் செயல். நீங்கள் பணிவோடு செல்வதால்தான் மத்திய அரசு தலையிடுகிறது. இதிலும், எப்போதும் போல் இருந்துவிடாமல் திராணி இருந்தால் தைரியமாக இதை எதிர்கொள்ள வேண்டும். அமைச்சர் செங்கோட்டையன்: எங்கள் கொள்கையில் தெளிவாக இருக்கிறோம். தைரியத்தோடு, துணிச்சலோடு எங்கள் கொள்கையில் உறுதியாக நின்று கொண்டிருக்கிறோம். பொன்முடி: 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்று அமைச்சர் அறிவித்தார். பின்னர் அவரே பொதுத் தேர்வு கிடையாது என்றார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி: அன்றைய கல்வி முறைக்கும், இன்றைய கல்வி முறைக்கும் அதிக வேறுபாடு இருக்கிறது. நாம் படிக்கும் போதெல்லாம் பாஸ் பண்ணினால்தான் அடுத்த வகுப்புகளுக்கு செல்ல முடியும். அப்போதுதான் மாணவனின் தரத்தை நாம் மதிப்பிட முடியும்.


   தேர்வுகள் எழுதாமல் சென்றால், அந்த மாணவன் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எப்படி எதிர்கொள்வான். மாணவரின் தரம் என்ன என்பதை கண்டறிந்தால்தான் தரமான கல்வி வழங்க முடியும். நீங்கள் சொன்னதால் பொதுத் தேர்வை ரத்து செய்யவில்லை. தரமான கல்வி கிடைக்கும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலே 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால் அத்தேர்வு குறித்து அவதூறு பரப்பியதால் முடிவை மாற்றிக் கொண்டோம். பொன்முடி: நாம் படிக்கும் போது இஎஸ்எஸ்எல்சியாக இருந்தது. பின்னர் அது எஸ்எஸ்எல்சியாக மாற்றப்பட்டது. தேர்வு வைப்பதால் மட்டும் கல்வியின் தரம் உயர்ந்துவிடாது. முதல்வர் பழனிசாமி: விஞ்ஞான உலகத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். அதற்கு தகுந்தவாறு மாணவர்களை தயார்படுத்தினால்தான் உலகத் தரத்திலான கல்வி அவர்களுக்கு கிடைக்கும். நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக கிராமப்புற மாணவர்கள் போட்டி போடும் அளவுக்கு அறிவை வளர்த்துக்கொள்ளவே கொண்டு வந்தோம்.


   அமைச்சர் கே.பி.அன்பழகன்: நாம் கல்லூரி தொடங்குவதற்கு மத்திய அரசு தடையாக இல்லை. அதிமுக ஆட்சியில் 85 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஓ.எஸ்.மணியன்: திராணி இருந்தால் மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்று சொன்னார். மல்யுத்தத்துக்கு நாங்கள் செல்லவில்லை. ராஜதந்திரத்துடன் நமக்கு தேவையானவற்றை பெற வேண்டும். தமிழக மக்களின் ஜீவாதார உரிமைகளை எப்போதும் விட்டு கொடுக்கமாட்டோம். பொன்முடி: நீட் தேர்வை திமுக நுழையவிடவில்லை. ஆனால் நீங்கள் நுழையவிட்டீர்கள். சட்டசபையில் தீர்மானம் ேபாட்டும் ஒன்றும் நடக்கவில்லை. அமைச்சர் விஜயபாஸ்கர்: காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் நீட் தேர்வுக்கான பாலிசி கொண்டுவரப்பட்டது. அப்போது அதை எதிர்த்திருந்தால் இந்த பிரச்னையே வந்திருக்காது. நீட் தேர்வு என்ற வைரசை கொண்டு வந்தது நீங்கள் தான்.

   எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்: நீட் பிரச்னை குறித்து பல்வேறு சமயங்களில், பல்வேறு விவாதங்கள் இதே அவையில் நடந்துள்ளது. மீண்டும் இப்போது கிளம்பி இருக்கிறது. நீட் தேர்வைப் பொறுத்தவரை தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தவரை தமிழ்நாட்டில் நுழைய விடாமல் பார்த்துக் கொண்டோம் என்பது உண்மை. அமைச்சர் சொன்னது போல இருக்கலாம். நான் மறுக்கவில்லை. ஆனால் அந்தந்த மாநிலம் விரும்பினால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்ற சூழ்நிலையில்தான் அது நிறைவேற்றப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி கடைசி வரையில் அதை நாம் எதிர்த்திருக்கிறோம். இதே அவையில் பல சமயங்களில் எடுத்து சொன்ன போது, எந்த காரணத்தைக் கொண்டும் நீட் தேர்வு வராது, அதைத் தடுக்கிற முயற்சியில்தான் ஈடுபடுவோம் என்று நீங்கள் பலமுறை உறுதிமொழி தந்துள்ளீர்கள். தேர்தல் அறிக்கையிலும் உறுதி அளித்துள்ளீர்கள். உங்களுடைய கட்சியின் பொதுக்குழுவிலும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளீர்கள்.



No comments