Breaking News

யார் இந்த ஜேன் ஆர்மிண்டா டெலானோ Jane Arminda Delano?

ஜேன் டெலானோ

✍ நவீன செவிலியர் பணியின் முன்னோடியும், அமெரிக்க செஞ்சிலுவை செவிலியர் சேவையைத் தொடங்கியவருமான ஜேன் ஆர்மிண்டா டெலானோ 1862ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி அமெரிக்காவின் மான்டுர் ஃபால்ஸ் கிராமத்தில் பிறந்தார்.

✍ இவர் 1886ஆம் ஆண்டு நர்ஸிங் பயிற்சியில் பட்டம் பெற்ற பிறகு, புளோரிடா ஜாக்சன்வில் மருத்துவமனையில் 1888ஆம் ஆண்டு பணிக்குச் சேர்ந்தார். அங்கு மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கவனித்து வந்தார். மேலும், இவர் செவிலியரின் பணிகளில் பல புதுமையான, பயனுள்ள வழிமுறைகளைக் கொண்டு வந்தார்.

✍ இவர் 1898ஆம் ஆண்டு அமெரிக்க ஸ்பெயின் போரின்போது நியூயார்க் நகரின் அமெரிக்க செஞ்சிலுவை அமைப்பின் உறுப்பினரானார். செஞ்சிலுவை அமைப்புக்கு செவிலியர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டது.

✍ தான் படித்த பெலவ்யூ செவிலியர் பயிற்சிப் பள்ளியின் தலைவராக 1902ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 1909ஆம் ஆண்டுவரை அங்கு பணிபுரிந்தார். பின்பு செவிலியர் பணியில் இவரது சிறப்பான பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக அமெரிக்க செவிலியர் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டார். இப்பதவியை 3 முறை வகித்தார்.

✍ அமெரிக்க தேசிய செஞ்சிலுவை செவிலியர் சேவைக்குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனி ஒருவராகப் பாடுபட்டு ,அமெரிக்க செஞ்சிலுவை செவிலியர் அமைப்பை உருவாக்கினார். முதல் உலகப் போரின்போது, இவரது முயற்சியால் செஞ்சிலுவை அமைப்பில் இணைந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள், காயமடைந்த போர் வீரர்களுக்கு ஆற்றிய சேவை குறிப்பிடத்தக்கது.

✍ ஐரோப்பாவில் 1918ஆம் ஆண்டு இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அங்கு சென்று நோயாளிகளுக்கு சேவையாற்றினார். இறுதிமூச்சு வரை தன்னலம் கருதாமல் பிறருக்காக சேவைபுரிந்த ஜேன் டெலானோ 1919ஆம் ஆண்டு மறைந்தார்.


No comments