Breaking News

நாளை முதல் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே

   கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான கடைகளைத் திறப்பதற்குத் தமிழக அரசு ஏற்கெனவே கட்டுப்பாடு விதித்திருந்தது. அதாவது காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணிவரை மட்டுமே கடைகள் திறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிப்பதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.


   இந்நிலையில், அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கான நேரத்தைக் குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


   மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த பகுதியில் உள்ள மத தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர். அதுகுறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். அதில், “நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க மதம் சார்ந்த கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று ஜாதி, மத பேதமின்றி அனைவருக்கும் பரவும். எனவே மதியம் பூசுவதைத் தவிர்க்க வேண்டும். மாவட்டத்தில் அனைத்து மருத்துவமனைகளையும் திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோய்த் தொற்று உடையவர்களை அன்போடும் பரிவோடும் நடத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.



No comments