Breaking News

தலைக்கு ஷாம்பு கூட வேணாம், வெறும் தண்ணீரில் இப்படி குளிச்சாவே முடி சூப்பரா இருக்குமாம்!

தலைக்கு ஷாம்பு கூட வேணாம், வெறும் தண்ணீரில் இப்படி குளிச்சாவே முடி சூப்பரா இருக்குமாம்!
     தலை குளியலுக்கு சீயக்காயும், உடல் சருமத்துக்கு குளியல் பொடியும் பயன்படுத்தியவர்கள் நம் முன்னோர்கள். நாளடைவில் தலை குளியலுக்கு ஷாம்புகள் வரத்துவங்கியது. ஷாம்புகளிலும் பலவிதமான ரகங்கள் கிடைக்கிறது. இரசாயனம் நிறைந்த இவை கூந்தலின் வளர்ச்சிக்கு உதவும் என்பதை காட்டிலும் பெரும்பாலும் கெடுக்கவே செய்யும். ஏனெனில் மாறி மாறி பயன்படுத்தும் ஷாம்பு வகையறாக்கள் முடி உதிர்வை ஊக்குவிக்கும். வறட்சியை உண்டாக்கும். கூடவே முடி வளர்ச்சியையும் தடுத்துவிடும். இதனால் அழகான கூந்தலை விரும்புபவர்களுக்கு அது கனவாகவே மாறிவிடவும் கூடும்.

அப்படியெனில் ஷாம்பு பயன்படுத்தாமல் கூந்தலை சுத்தம் செய்ய முடியுமா என்று கேட்கலாம். நிச்சயம் முடியும். நீங்கள் அதற்கு என்ன செய்யவேண்டும் என்று பார்க்கலாம்.

​வெறும் தண்ணீரில் அலசுங்கள்

வெறும் தண்ணீரில் கூந்தலை அலசவேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் நீரின் தன்மையை உறுதி செய்வது அவசியம். ஏனெனில் தண்ணீரில் படிந்திருக்கும் அதிகப்படியான உப்பு, அழுக்கு, குளோரின் போன்றவை கூந்தலுக்கு நிச்சயம் கெடுதல் செய்யகூடியவை. அதற்காக சுத்தமான நீருக்கு எங்கே போவது என்று கேட்கிறீர்களா?

இருக்கும் நீரை கொதிக்கவைத்து அதை இறக்கி ஆறிய பிறகு பயன்படுத்தினால் தண்ணீரில் இருக்கும் மாசு ஓரளவு குறையக்கூடும். அதே நேரம் வெந்நீரில் குளிக்க கூடாது. அதிக சூடான நீர் கூந்தலின் வேர்க்கால்களை வலுவிழக்க செய்துவிடும். அதனால் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீர் எப்போதுமே நன்மை தரக்கூடியது

​எப்படி அலசுவது

தலைக்குளியல் வெறும் நீரில் தான் என்பதை உறுதிசெய்துகொண்டால் நீங்கள் செய்யவேண்டிய முதல் வேலை என்ன தெரியுமா? கூந்தலை சிக்கில்லாமல் உடைத்து வைத்துகொள்வதுதான். சிக்குகள் இருக்கும் முடியில் படர்ந்திருக்கும் அழுக்குகள் கூந்தலை அலசும்போது வெளியேறாமல் கூந்தலில் தங்கிவிடும்.

அதனால் சிக்கில்லாமல் கூந்தலை சீவி பிறகு பக்கெட் நீரில் முன்புறம் குனிந்தபடி கூந்தலை முக்கி எடுக்க வேண்டும். கூந்தல் முழுமையாக ஈரம் அடைந்தபிறகு விரல்களை கூந்தலினுள் நுழைத்து, சொரிந்து சொரிந்து மசாஜ் போன்று தேய்க்கவும். எண்ணெய் மசாஜ் போன்று செய்துவந்தால் அழுக்குகள் வெளியேறும்.

ஷவராக இருந்தாலும் முதலில் கூந்தலை நன்றாக ஈரம் கொண்டு அலசி பிறகு ஷாம்பு போட்டு தேய்ப்பது போல் தேய்த்து அலசினால் போதுமானது. வெதுவெதுப்பான நீரில் அலசி எடுத்தால் இறுதியாக கூந்தலை குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி எடுக்க வேண்டும்.

​வெறும் நீர் வறட்சியைத் தடுக்கும் கூந்தலுக்கு பயன்படுத்தும் பொருள்கள் எதுவாக இருந்தாலும் அவை கெமிக்கல் குறைந்த மைல்டான சாதனமாக இருந்தாலும் கூட அவை கூந்தலுக்கு இலேசான வறட்சியை உண்டாக்கவே செய்யும். ஷாம்பு போட்ட வறட்சியை ஈடுசெய்ய தலைக்கு தனியாக கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும்.

கூந்தலுக்கு என்று பிரத்யேகமாக கிடைக்கும் மாய்சுரைசர் பயன்படுத்தினாலும் தலையில் பிசுபிசுப்பு உண்டாகும். பிறகு இதைபோக்க அவ்வபோது ஷாம்பும் பயன்படுத்த வேண்டும். இப்படி சுழற்சி முறையில் பல பொருள்களை மாற்றி மாற்றி பயன்படுத்தும் போது கூந்தல் வறட்சி தவிர்க்க முடியாததாகி விடுகிறது. ஆனால் வெறும் தலையில் கூந்தலை அலசி எடுத்தால் இந்த வறட்சியை எப்போதுமே கூந்தல் பெற்றுவிடாது.

​எப்படி கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்

இயற்கையாகவே கூந்தலில் போதுமான அளவு எண்ணெய் சுரப்பு இருக்கும். இவை சீராக இருந்தாலே கூந்தல் மென்மையாகவும், உறுதியாகவும் இருக்கும். முடி உதிர்வு இல்லாமல் இருப்பதால் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும். இயற்கையாகவே கூந்தல் ஆரோக்கியமாக இருப்பதால் தனி பராமரிப்பு எதுவும் தேவையிருக்காது.

ஷாம்புவில் இருக்கும் இரசாயனங்களால் தலையில் ஸ்கால்ப் பகுதியில் அரிப்பும், எரிச்சலும் உண்டாகும் பிரச்சனை இருக்காது. முடி உதிர்வுக்கு ஒன்று, அழுக்கு நீங்க ஒன்று, வறட்சிக்கு ஒன்று, எண்ணெய்ப்பசைக்கு ஒன்று என்று மாறி மாறி ஷாம்புக்களை பயன்படுத்த வேண்டியிருக்காது. பெருமளவு இரசாயனம் குறையும் போது கூந்தல் ஆரோக்கியம் நிச்சயமாக அதிகரிக்கும்.

கூந்தலுக்கு கிடைக்கும் நன்மை

ஷாம்புகள் இல்லாமல் வெறும் நீரில் கூந்தலை அலசும் போது தலை சருமத்தில் இருக்கும் பிஹெச் அளவுகளை கட்டுக்குள் வைக்க தலையிலிருந்து சுரக்கும் சீபம் வேகமாக செயல்படுகிறது. முன்பு பயன்படுத்திய ஷாம்புகளால் முடிவறட்சியடைந்திருக்கும். அந்த வறட்சியை போக்க கூடுதலாக தலையில் சீபம் அதிகரிக்க ஆரம்பிக்கும். சீபம் சுரக்க சுரக்க வறட்சியான கூந்தல் மென்மையாக மாறிவிடும்.

முடிக்கு கலரிங் பண்ணதுக்கு அப்புறம் தலைக்குளியலின் போது என்ன செய்யணும்?

ஒருவேளை சீபம் அதிகமாக சுரப்பது போன்று உணர்ந்தால் வெதுவெதுப்பான நீரில் கூந்தலை அலசி எடுக்க வேண்டும். சீபமானது கூந்தல் முழுவதும் பரவ வேண்டுமெனில் உரிய முறையில் அவை கூந்தலின் நுனிவர படரும்படி செய்ய வேண்டும். கூந்தலின் தன்மைக்கேற்ப பிரத்யேகமான சீப்புவகைகளை பயன்படுத்த வேண்டும். அடர்ந்த கூந்தலுக்கு மர பிரஷ், சுருட்டை முடிக்கு பற்கள் வைத்த சீப்பு பயன்படுத்தலாம். இதனால் சீபமானது கூந்தலின் நுனிவரை படர்ந்து மென்மையை உண்டாக்கும். ஒருநாளில் இந்த மாற்றம் உண்டாகாது என்றாலும் தொடர்ந்து வெறும் நீரில் தலையை அலசினால் முடி மென்மையாக மாறுவதை உணரமுடியும்.

No comments