Breaking News

முடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்

முடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்
கூந்தல் உதிர்வு என்பது அசாதாரணமாக இருக்கும் போது செய்ய வேண்டிய முதல் விஷயம் உதிர்வை கட்டுக்குள் கொண்டுவர வேண்டியதுதான்.. கூந்தல் உதிர்வுக்கு பலவிதமான காரணங்கள் இருக்கும். உரிய பராமரிப்பு இல்லாமல் அழுக்கு படர்ந்து. பிசுபிசுப்பு, பொடுகு போன்றவையும் இருக்கலாம். உடலில் சத்துகள் குறைந்தாலும் முடிக்கு வேண்டிய ஊட்டச்சத்து கிடைக்காமல் அவை வலுவிழந்து முடிஉதிர்தலுக்கு வழிவகுக்கும். முன்பு கூந்தல் வலுவாக்கும் கூந்தல் எண்ணெய் தயாரிப்புகளை வீட்டிலேயே பயன்படுத்தினார்கள். அப்படி அவர்கள் பயன்படுத்திய பொருள்களில் முக்கியமானது கருஞ்சீரகமும், வெந்தயமும் இதை கொண்டு எண்ணெய் தயாரித்து பயன்படுத்தினால் முடி உதிர்வு கட்டுக்குள் வரும்.

கருஞ்சீரகம்
கருஞ்சீரகம் பயன்படுத்துவதற்கு முன்பு இதில் இருக்கும் நன்மை குறித்து தெரிந்துகொள்வோம். யுனானி மருத்துவத்தில் கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. கருஞ்சீரக விதையில் இருக்கும் தைமோகுயினன் என்ற வேதிப்பொருள் உண்டு. கருஞ்சீரகத்தை எண்ணெய் காய்ச்சி பயன்படுத்தும் போது இவை தலைமுடி உதிர்தலை போராடும். தலையின் ஸ்கால்ப் பகுதியில் இருக்கும் குறைபாட்டை நீக்கும். முடி வறட்சியையும் முடி உதிர்தலையும் கட்டுப்படுத்தும். கூடுதலாக முடி வளர்ச்சியை ஊக்குவித்து இளநரையையும் கட்டுக்குள் வைக்கும்.
தேவை - 100 கிராம்

வெந்தயம்

வெந்தயம் குளிர்ச்சி மிக்கது. கருஞ்சீரகம் போன்று இதையும் உள்ளுக்கும் வெளிப்புற சருமத்துக்கும் பயன்படுத்தலாம். கூந்தலை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க வெந்தயத்தை அரைத்து பயன்படுத்துவதுண்டு. ஆனால் வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும் என்று சொல்பவர்கள் வெந்தயத்தை பொடித்து காய்ச்சி பயன்படுத்தலாம் இதனால் உடல் குளிர்ச்சி அடையாது. சைனஸ் பிரச்சனை இருப்பவர்களும் இதை பயன்படுத்தலாம். வெந்தயம் கூந்தலுக்கு கருமை நிறத்தை அளித்து இளநரை பிரச்சனை வராமல் பாதுகாக்கும். வெந்தயத்தை கொண்டு வீட்டிலேயே ஷாம்பு தயாரித்தும் பயன்படுத்தலாம்.
வெந்தயம் - 100 கிராம்

​தேங்காய் எண்ணெய்
முடி வளர உதவும் எண்ணெய் வகைகள் எல்லாம் இப்போது வந்தவை தான். முந்தைய காலங்களில் தலைக்கு தேய்த்து குளிக்கவும் உடல் உஷ்ணத்தை தவிர்க்க நல்லெண்ணெயும், கூந்தலின் வளர்ச்சிக்கு தேங்காயெண்ணெயும் மட்டும்தான் பயன்படுத்திவந்தார்கள். அதனால் சுத்தமான தேங்காயெண்ணெயை பயன்படுத்தலாம். முடி கொட்டிய இடத்தில் மீண்டும் முடி வளர வைக்கும் அற்புத குணங்களை கொண்டது. ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவி புரியும் தன்மை கொண்ட தேங்காயெண்ணெயில் இருக்கும் ஆன்டி மெக்ரோபியல் பண்புகள் கூந்தலின் ஸ்கால்ப் மற்றும் முடியில் இருக்கும் பாக்டீரியாக்களை அகற்ற உதவுகிறது.
தேங்காயெண்ணெய் - 150 கிராம்

​காய்ச்சும் முறை
கருஞ்சீரகத்தையும் வெந்தயத்தையும் எடுத்து மிக்ஸியில் பொடியாக அரைக்கவும். தேங்காயெண்ணெயுடன் பொடிகளை நன்றாக கலந்து சிறிய பாத்திரத்தில் வைக்க வேண்டும். அடுப்பில் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதற்கு நடுவில் இந்த பாத்திரத்தை வைத்து சூடு செய்தால் போதும். இவை சற்று சூடேறியவுடன் இடுக்கி கொண்டு அதை வெளியே எடுத்து கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும். பிறகு தினமும் வெயிலில் வைக்கவும். 3 அல்லது 4 நாள் வைத்து எடுத்தால் எண்ணெயின் நிறம் மாறிவிடும். பிறகு இதை பயன்படுத்தலாம்.

​பயன்படுத்தும் முறை 

எண்ணெய் நன்றாக ஊற ஊற இவற்றின் பலன் பன்மடங்கு கிடைக்கும். தினமும் தலைக்கு இந்த எண்ணெயை பயன்படுத்தலாம். குறிப்பாக உள்ளங்கையில் தடவி தலையின் ஸ்கால்பகுதியில் விரல்களால் இலேசாக மசாஜ் கொடுத்து வந்தால் கூந்தல் மயிர்க்கால்களுக்கு ஊட்டம் கிடைக்கும். முடி உதிர்தல் பிரச்சனை படிப்படியாக குறையும். குறைந்தது இரண்டு மாதங்களாவது நீங்கள் பொறுமையோடு செய்தால் பலன் நிச்சயமாக கிடைக்கும். ஆனால் முடி உதிர்தல் பிரச்சனை நிரந்தரமாக நீங்கும் அளவுக்கு பலன் இந்த எண்ணெயில் கிடைக்கும்.

குறிப்பு

இந்த எண்ணெயை ஆறுமாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். கூந்தல் வளர்ச்சியும் அடர்த்தியும் அதிகரிப்பதோடு இளநரை பிரச்சனையும் இருக்காது. குறிப்பாக முடி உதிர்தல் முற்றிலும் குறையும். ஆண்கள் பெண்கள் அனைவரும் இதை பயன்படுத்தலாம். குளிர்ச்சிதரும் என்று நினைப்பவர்கள் எண்ணெயை இலேசாக சூடேற்றி பயன்படுத்தலாம். தலைக்கு ஆயில் மசாஜ் செய்யவும், தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கவும் கூட இந்த எண்ணெயை பயன்படுத்தலாம்.

No comments