Breaking News

மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது எப்படி ஆசிரியர்களே, உங்கள் மாணவர்களுக்கு கூற பயனுள்ள முழுமையான ஒரு தொகுப்பு

மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது எப்படி ஆசிரியர்களே, உங்கள் மாணவர்களுக்கு கூற பயனுள்ள முழுமையான ஒரு தொகுப்பு
பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் சேர்ந்து உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அதேசமயம் உயர்கல்வி படிப்பதற்கான செலவுகளும் அதிகரித்து வருகின்றன. கல்வி நிறுவனங்களில் படிக்க இடம் கிடைத்தும் பணம் இல்லாத காரணத்தினால் மாணவர்கள் படிப்பை விட்டு விடக் கூடாது என்பதற்காக வங்கிகள் மூலம் மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

பிளஸ் டூ தேர்வு முடித்து கல்லூரியில் காலடி எடுத்து வைக்கக் காத்திருக்கும் மாணவர்கள் உயர்கல்வி படிப்புச் செலவுக்கு என்ன செய்வது என்று யோசிக்கலாம். அந்த மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் வங்கிகள் மூலம் கல்விக் கடன் பெறுவது எப்படி என்கிற விவரங்களை தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. வரும் கல்வி ஆண்டில் உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் கல்விக் கடன் பெறுவதற்கான ஆயத்தப் பணிகளை இப்போதே தொடங்கி விடுவது நல்லது. இதுகுறித்து மாணவர்களுக்கு இயல்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் இதோ…

எந்தெந்தப் படிப்புகளில் சேருவதற்குக் கல்விக்கடன் வழங்கப்படுகிறது?

பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் போன்ற அரசு அமைப்புகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட இளநிலை பட்டப் படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, முதுநிலை டிப்ளமோ படிப்புகளிலும் சேர்ந்துள்ளவர்கள் கல்விக் கடன் கேட்டு பொதுத் துறை வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். ஐசிடபிள்யூஏ, சிஏ, சிஎஃப்ஏ போன்ற படிப்புகளில் சேருபவர்களும் ஐஐஎம், ஐஐடி, ஐஐஎஸ்சி, எக்ஸ்எல்ஆர்ஐ, நிப்ட், நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன் போன்ற கல்வி நிறுவனங்கள் நடத்தும் படிப்புகளில் சேருபவர்களும் கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

இந்திய நர்சிங் கவுன்சில், டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஏவியேஷன், டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஷிப்பிங் போன்ற அரசு அங்கீகார அமைப்புகளின் அனுமதியுடன் நடத்தப்படும் நர்சிங் டிப்ளமோ அல்லது நர்சிங் பட்டப் படிப்பு, பைலட் டிரெயினிங், ஷிப்பிங் போன்ற பட்ட மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேருபவர்களும் கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். சிறந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் நடத்தும் அங்கீகாரம் பெற்ற படிப்புகளில் சேருபவர்களுக்கும் கல்விக் கடன் கிடைக்கும். இதுதவிர, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய படிப்புகளுக்கும் கல்விக் கடன் வழங்குவது குறித்து வங்கிகள் பரிசீலனை செய்யும். அத்துடன், வெளிநாடுகளில் உள்ள தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் படிக்க தேர்வு செய்யப்பட்ட மாணவர்களும் தங்களது படிப்புச் செலவுகளுக்காக வங்கிகளில் கல்விக் கடன் பெறலாம்.

பத்தாம் வகுப்பு படித்து விட்டு தொழில் பயிற்சி மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்குக் கல்விக் கடன் கிடைக்குமா?
பத்தாம் வகுப்பு படித்து விட்டு பாலிடெக்னிக், ஐடிஐ போன்ற கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ படிப்புகளில் சேரும் மாணவர்களுக்குக் கல்விக் கடன் கிடைக்கும். அதாவது, பத்தாம் வகுப்பு படித்து விட்டு தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சி படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கும் வங்கிகளில் கல்விக் கடன் பெறத் தனித்திட்டம் உள்ளது. இந்த மாணவர்களுக்கு கல்விக் கடன் வட்டி சலுகை மட்டும் கிடைக்காது.

தேவையான ஆவணங்கள்

* கல்லூரி போனோஃபைட் சான்றிதழ்.
* கட்டணம் குறித்த தெளிவான தகவல்கள்.
* பெற்றோரின் வருமானச் சான்றிதழ்.
* இருப்பிடச் சான்றிதழ்.
* பள்ளி மாற்று சான்றிதழ்.
* 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.

கல்விக் கடனாக எவ்வளவு வழங்கப்படும்?

இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் படிப்பதற்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கல்விக் கடன் பெறலாம். வெளிநாடுகளில் படிப்பதற்கு ரூ.20 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படுகிறது. கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம், தேர்வுக் கட்டணம், நூலகம் மற்றும் லேபரட்டரி கட்டணம், புத்தகங்கள், லேப்டாப், புராஜக்ட், ஸ்டடி டூர் போன்ற பல்வேறு படிப்பு தொடர்பான செலவுகளுக்குக் கல்விக் கடன் பெறலாம். வெளிநாடு செல்லும் மாணவர்களின் போக்குவரத்துச் செலவுக்கும் கல்விக் கடன் பெறலாம். நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் பெற்றவர்களுக்கு அரசு அமைப்புகள் நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணத்தின்படியே கல்விக் கடன் பெற முடியும்.

கல்விக் கடன் பெறுவதற்கு வங்கிகளில் முன் பணம் செலுத்த வேண்டுமா?

ரூ.4 லட்சம் வரை கல்விக் கடன் பெறுவதற்கு வங்கிகளில் முன்பணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. இந்தியாவில் படிக்க ரூ.4 லட்சத்துக்கு மேல் கல்விக் கடன் வாங்கினால் கடன் தொகையில் 5 சதவீதமும் வெளிநாடுகளில் படிக்க ரூ.4 லட்சத்துக்கு மேல் கல்விக் கடன் வாங்கினால் கடன் தொகையில் 15 சதவீதமும் முன்பணமாக மாணவர்கள் செலுத்த வேண்டியதிருக்கும்.

கல்விக் கடன் பெறுவதற்கு மாணவர்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டுமா?

ரூ.4 லட்சம் வரை கல்விக் கடன் பெறுவதற்கு ஜாமீனோ, உத்தரவாதமோ தேவையில்லை. ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.7.5 லட்சம் வரை கடன் வாங்கினால் மூன்றாம் நபர் ஜாமீன் தேவைப்படும். ரூ.7.5 லட்சத்துக்கு மேல் கல்விக் கடன் பெற்றால், சொத்து உத்தரவாதம் தேவைப்படும். அனைத்துக் கடன் ஆவணங்களிலும் மாணவருடன் பெற்றோர் உத்தரவாதம் அளித்துக் கையெழுத்திட வேண்டியதிருக்கும்.

கல்விக் கடனுக்கு வட்டி எவ்வளவு வசூலிக்கப்படும்?

‘பேஸ் ரேட்’ அடிப்படையில் வங்கிகள் கல்விக் கடனுக்கான வட்டியை நிர்ணயிக்கின்றன. வங்கிகளைப் பொருத்து வட்டி விகிதம் வேறுபடும். சுமார் 12 சதவீதத்திலிருந்து 14 சதவீதம் வரை வட்டி இருக்கும். கல்விக் கடன் பெறும் மாணவர்கள் படிக்கின்ற காலத்திலேயே வட்டியைச் செலுத்த வேண்டும் என்று வங்கிகள் மாணவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது. படித்து முடிக்கும் வரை வட்டியை செலுத்த இயலாது என்பது குறித்து மாணவர்களே வங்கிகளிடம் எழுதிக் கொடுத்து விடலாம்.

No comments