லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தூக்கிலிட்டால் என்ன? உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி
  லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தூக்கிலிட்டால் என்ன? உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள்
  கேள்வி
  
    விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை
  எடுத்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை கொள்முதல்
  செய்ய 40 ரூபாய் லஞ்சம் கேட்பதாக பரவலாக விவசாயிகள் தொடர்ந்து குற்றச்சாட்டை
  முன்வைத்து வந்தனர். இதற்கிடையே, தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை
  அதிகரிக்க கோரி சென்னையை சேர்ந்த சூரியப்பிரகாசம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை
  கிளையில் ஒரு பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.
   இந்த வழக்கு கடந்த மாதம் 10-ம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள்,
  கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,
  அரசு உயர் அதிகாரி தமது ஊதியத்தை தாண்டி லஞ்சமாக பெறுவது பிச்சை எடுப்பதற்கு சமம்
  என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். தொடர்ந்து, கடந்த வாரம் விசாரணைக்கு
  வந்தபோது, தமிழகத்தில் எத்தனை கொள்முதல் நிலையங்கள் உள்ளன. எத்தனை கொள்முதல்
  நிலையங்கள் அதிகரிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு என்ன அடிப்படை வசதிகள்
  செய்யப்பட்டுள்ளது என்பதை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். 
   இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில்
  தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தமிழகத்தில் 800 நெல் கொள்முதல் நிலையங்கள்
  உள்ளன. மேலும், நெல்கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க போதிய நடவடிக்கை எடுத்து
  வருகிறது. நெல்கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக வெளியான
  செய்தி முற்றிலும் தவறாக செய்தி என்று தெரிவித்திருந்தது. அறிக்கையில் அடுத்த
  பக்கம் முறைகேடுகளில் ஈடுபட்ட 150 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
  என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 
   அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள் கடும் கோபம் அடைந்து, ஒரு அதிகாரி
  லஞ்சம் வாங்கவில்லை என்று தகவல் தெரிவித்துவிட்டு, அடுத்த வரியில் லஞ்சம்
  வாங்கியதாக 150 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
  நீதிமன்றத்தை அரசு அதிகாரிகள் ஏமாற்றும் நோக்கத்துடன் அறிக்கை தாக்கல்
  செய்துள்ளனர். இது ஏற்புடையது அல்ல. 
   இரவு, பகல் பாராமல் தங்கள் விவசாய நிலங்களில் பாடுபட்டு விவசாயம் செய்து
  பிறருக்கு உணவூட்டும் வகையில் தங்களது நெல்களை விற்பனை மையங்களுக்கு கொண்டு வரும்
  விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தூக்கிலிட்டால் என்ன? என்று கேள்வி
  எழுப்பிய நீதிபதிகள், லஞ்சம் வாங்குவது புற்றுநோயைவிட கொடியது. லஞ்சம் நாட்டை
  புற்றுநோய் போல் அரித்துக்கொண்டிருக்கிறது என்றனர். மேலும், தமிழகத்தில் உள்ள
  நெல்கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்கும் எத்தனை அதிகாரிகள் மீது
  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
   வழக்குப்பதிவு செய்யப்பட்ட அதிகாரிகள் எத்தனை பேர் கைது
  செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகள் வாங்கிய ஊழியம் என்ன, அதே
  காலகட்டத்தில் அரசு அதிகாரிகளின் ஊழியம் என்ன? என்ற என்ற புள்ளி விவரங்களுடன்
  தமிழக அரசு கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த
  வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
 

 
 
 
 
 
