Breaking News

கொரோனா பரவலை தடுக்குமா ரேப்பிட் டெஸ்டிங்

கொரோனா பரவலை தடுக்குமா ரேப்பிட் டெஸ்டிங்

தமிழகம் மற்றும் ஏனைய மாநிலங்களில் ரேப்பிட் டெஸ்டிங் கிட் கொண்டு Covid-19 பரிசோதனை செய்ய போகிறது

ரேப்பிட்_டெஸ்டிங் என்றால் என்ன?? 

எந்த ஒரு வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்கும் Gold standard எனப்படும் ஆகுமானவரை உண்மைக்கு நிகரான நிச்சயமான முடிவுகளை தரும் சோதனை என்பது அந்த வைரஸை முழுமையாகவோ அல்லது அதனுடைய சில பகுதிகளை காண்பதோ தான்.


அதாவது புதிய கொரோனா தொற்றைப் பொறுத்தவரை தொண்டைத்தடவல் (Throat swab) பரிசோதனையில் தொற்று கண்டவரின் தொண்டையில் இருக்கும் வைரஸை RT-PCR (Reverse Transcriptase Polymerase Chain Reaction) எனும் பரிசோதனை மூலம் பல பிரதிகளாக மீளுருவாக்கம் செய்து வைரஸின் இருப்பை கண்டறிந்து கூறும் சோதனை.

மேற்சொன்ன பரிசோதனையில் இருக்கும் பாதகம் யாதெனில் இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் சமூகப்பரவல் நடந்துள்ளதா என்பதை அறிவதற்கு மேற்சொன்ன பரிசோதனையை செய்தால் நமக்கு ரிசல்ட் கிடைக்க ஒரு நாள் ஆகிறது .

வைரஸ் நம்மை விட படுவேகமாக பரவுவதால் அதன் வேகத்துக்கு ஈடு கொடுக்க நமக்கு இன்னும் வேகமான பரிசோதனை முடிவுகள் தேவை.

மேலும் RT-PCR முறை காஸ்ட்லியாக இருக்கிறது. ஒரு பரிசோதனைக்கு ரூபாய்4500 ஆகிறது. இதைக்கொண்டு லட்சக்கணக்கில் பரிசோதனை செய்தால் நமது நிதி ஒதுக்கீட்டில் சிங்கத்தின் பங்கை பரிசோதனைக்கே செலவிட வேண்டிவரும் 


இதற்கு மாற்றாக வந்திருப்பதே ரேப்பிட் டெஸ்ட்

இதில் நாம் வைரஸை நேராக பார்க்க மாட்டோம். மாறாக வைரஸ் உள்ளே வந்திருந்தால் நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் செய்யும் எதிர்வினையைக் கொண்டு நோயின் தன்மையை ஆகுமானவரை உண்மைக்கு நிகராக அறிய முடியும்.

அதாவது ஒருவரை வைரஸ் தாக்கினால் அந்த வைரஸ்க்கு பெயர் "ஆண்ட்டிஜென்" எனப்படும் (antigen)
இவர்கள் தான் வெளியூர் கலவரக்காரர்கள் என்று எடுத்துக்கொள்ளுங்கள்

ஒரு ஊருக்குள் இவர்கள் நுழைந்து விடுகிறார்கள்.முதலில் கண்ணில் தெரியும் அனைவரையும் அடிப்பார்கள். அடித்து உடைப்பார்கள்.

திடீரென்று இப்படிப்பட்ட தாக்குதல் நடப்பதால் ஊருக்குள் இருந்து எந்த எதிர்வினையும் இருக்காது


பிறகு அந்த ஊர் மக்கள் சுதாரித்துக் கொண்டு முதலில் இவர்களைத் தடுக்க யார் முற்படுவார்கள்?

அந்த ஊர் பொதுமக்கள் தான் முதலில் களம் இறங்குவார்கள் இவர்கள் தான் "ஆண்ட்டிபாடிகள்" (Antibodies)

கலவரம் நடக்கிறது என்று தெரிந்த உடன் முதலில் வெளிவந்த அந்த ஊர் பொதுமக்கள் தான் "#IgM" ஆண்ட்டிபாடிகள்.

அடுத்து கொஞ்ச நேரம் கழித்து போலிசுக்கு தகவல் கிடைக்கும்
போலீஸ் கலவர இடத்திற்கு வந்து அடக்கும்.
போலீஸ் தான் "#IgG" ஆண்ட்டிபாடிகள்

போலீஸ் வந்தவுடன் அந்த ஊர் மக்கள் தாங்கள் எதிர்வினை ஆற்றுவதை நிறுத்தி விட்டு அவரவர் வீடுகளுக்குள் சென்று விடுவார்கள்.

அந்த கலவரம் முடிந்த பின் கூட அந்த ஊரை கலவரம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் அதை ஹாட் ஸ்பாட் லிஸ்ட்டில் சேர்த்து அங்கேயே ஒரு போலீஸ் பூத் உருவாக்கி எப்போதும் அங்கு காவலர்கள் இனிவரும் காலங்களிலும் இருந்து கொண்டே இருப்பார்கள் அல்லவா..

இப்போது மேற்சொன்ன விசயத்தை அப்படியே கோவிட்-19க்கு பொறுத்தி பார்த்தால் இந்த பரிசோதனை எப்படி வேலை செய்கிறது என்று புரிந்து விடும்


வெளியில் இருந்து வரும் வெளியூர் கலவரக்காரர்கள் தான் புதிய கொரோனா வைரஸ்கள் (Antigen = nCoV2019)

இவை ஊருக்குள் வந்து களேபரம் செய்து கொண்டு இருக்கின்றன.
அந்த ஊரில் இருந்து எந்த ஒரு எதிர்வினையும் ஏற்படாத அந்த காலக்கட்டம் தான் "Window period"

கொரோனா வைரஸ் உள்ளே வந்து ஏழு நாட்கள் வரை நமது எதிர்ப்பு சக்தியிடம் இருந்து எந்த எதிர்வினையும் இருக்காது.
இந்த காலத்தை "பரிசோதனையில் அறியமுடியாக்காலம்" என்று கூறலாம்.

பிறகு கலவரக்காரர்களின் வருகையை அறிந்து வெளியே வரும் அந்த ஊர் மக்கள் தான் "IgM" ஆண்டிபாடிகள்.

இந்த ஆண்டிபயாடிக்குகள் ஏழாவது நாளில் இருந்து பதின்மூன்றாவது நாள் வரை ரத்தத்தி்ல் இருக்கும். அதற்குப்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும். 

அடுத்து

போலீஸ் வரும்
இவை தான் IgG ஆண்ட்டிபாடிகள்

பதினான்காவது நாளில் இருந்து ரத்தத்தில் தெரிய ஆரம்பிக்கும். போலீஸ் ( IgG) வந்துவிட்டபடியால் அந்த ஊர் மக்கள் ( IgM) உள்ளே சென்று விடுவார்கள்.

எனவே IgM பதின்மூன்றாவது நாளுக்கு பிறகு தெரியாது.

அதற்குப்பிறகு எப்போது ரத்த பரிசோதனை எடுத்தாலும் IgG ஆண்ட்டிபாடி தெரியும். இது தான் போலீஸ் அந்த ஊரிலேயே ஏற்படுத்தும் செக்யூரிட்டி பூத்துக்கு ஒப்பாகும்.

எனவே கொரோனா வைரஸ் உள்ளே நுழைந்து ஏழு நாள் வரை இந்த பரிசோதனையில் கண்டறிய முடியாது என்பது இதன் பாதகம். ( False negatives due to Window period )

இருப்பினும் நோய் அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு முன்னர் சொன்ன RT-PCR பரிசோதனை செய்தால் பாசிடிவ் என்று அறியமுடியும்.

ஏழு நாட்களில் இருந்து பதின்மூன்று நாட்களுக்குள் பரிசோதனை செய்தால் IgM பாசிடிவ் என்று வரும். (21 நாட்கள் வரை நீடிக்கலாம்)அதாவது கலவரம் உக்கிரமாக இரு ஊர் பொதுமக்களுக்கு இடையே நடந்து கொண்டு இருக்கிறது என்று அர்த்தம்.

பதினான்காவது நாளில் இருந்து IgG பாசிடிவ் என்று வரும். அதாவது போலீஸ் சூழ்நிலைக்கு வந்து விட்டது என்று பொருள்.


இதில் கோவிட்-19 இல் முக்கியமான பிரச்சனை என்னவென்றால்
0-28 நாட்கள் முழுவதும் ஒரு தொற்றாளர் அவருக்கு அறிகுறி இருந்தாலும் சரி. இல்லாவிட்டாலும் சரி.

நோயைப்பரப்பும் தன்மையுடன் இருப்பார்.

முடிவுரை
சமூகப்பரவலை அறிவதற்கு நம்மிடம் இருக்கும் எளிய ஆயுதமாக இந்த ரேப்பிட் கிட்கள் செயல்படும் .

இதன் மூலம் கண்டறியப்படும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு
அவர்களின் தொடர்புகள் அறியப்பட்டு
சங்கிலத்தொடர் அறுக்கப்படும்.

இதன் மூலம் தமிழகம் எதிர்நோக்கி இருக்கும் ஆபத்தான முழு வீச்சில் பரவும் மூன்றாம் நிலையை நாம் அடைவதை விட்டும் தவிர்த்துக்கொள்ளவும் தள்ளிப்போடவும் முடியும்.

No comments