Breaking News

நாடு முழுவதும் வரும் கல்வியாண்டை ஜூலைக்குப் பதிலாக செப்டம்பரில் தொடங்கலாம் மத்திய அரசுக்கு பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை

நாடு முழுவதும் வரும் கல்வியாண்டை ஜூலைக்குப் பதிலாக செப்டம்பரில் தொடங்கலாம்: மத்திய அரசுக்கு பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை


வரும் கல்வியாண்டை ஜூலைக்குப் பதிலாக செப்டம்பரில் தொடங்கலாம் என பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்தியா உட்பட 209 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவிலும், வேகமாக பரவி வருகிறது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 16-ஆம் தேதி முதல் இந்தியாவில் இருக்கும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. மேலும் பள்ளி,கல்லூரிகளில் நடைபெற இருந்த பொதுத் தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.


2019-20ம் கல்வி ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வுகள் இன்னும் நடத்தப்படாத நிலையில் அவை அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஜூன் மாதத்தில் தேர்வுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில் அவை மேலும் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. கொரோனா தொற்று முற்றிலும் நீங்கிய பிறகே மாணவர்களை கல்லூரிகளுக்கு வரவழைக்க முடியும் என்பதால் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை எப்போது நடத்துவது, ஆன்லைனில் நடத்துவதா? வகுப்புகளை எப்போது தொடங்குவது? என்பது குறித்து ஆராய 7 பேர் கொண்ட 2 கமிட்டிகளை பல்கலைக்கழக மானியக் குழு உருவாக்கியது.


வரும் கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை ஜூலை மாதத்துக்கு பதில் செப்டம்பரில் தொடங்கலாம், நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ஜூன் மாதத்தில் நடத்தலாம் என்று என்று ஒரு கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. ஒத்திவைக்கப்பட்டுள்ள செமஸ்டர் தேர்வுகளை உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தால் ஆன்லைனிலேயே நடத்திக் கொள்ளலாம் என்றும், இல்லாவிட்டால் ஊரடங்கு முடிந்த உடன், சூழலைப் பொறுத்து நேரடி எழுத்துத் தேர்வாக நடத்தலாம் என்றும் மற்றொரு கமிட்டி பரிந்துரைத்துள்ளது. இதன் அடிப்படையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் புதிய அறிவிக்கையை 10 நாட்களில் வெளியிட உள்ளது.


No comments