Breaking News

பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கொரோனா!! கல்விதுறை அதிர்ச்சி

பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கொரோனா!! கல்விதுறை அதிர்ச்சி
கர்நாடகாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கு மத்தியில் கடந்த 25-ம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. முகக்கவசம், கிருமி நாசினி கொண்டு கை கழுவுதல் என பலத்த கட்டுப்பாடுகளுடன் சுமார் 8 லட்சத்து 48 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர்.

இந்நிலையில் தேர்வு மையங்கள் மற்றும் அதன் அருகே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஹாசன் மாவட்டம் அரகால்குட் வட்டத்தில் உள்ள மையத்தில் சனிகிழமை தேர்வு எழுதிய மாணவர் ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாணவர் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும்போது கொரோனா உறுதியான தகவல் வந்துள்ளது. ஆனாலும், அவரைத் தொடர்ந்து தேர்வு எழுத அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.

அதனால் அந்த அறையில் தேர்வு எழுதிய மற்ற 20 மாணவர்களும், தேர்வு கண்காணிப்பாளரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள கர்நாடக கல்வித்துறை அதிகாரிகள், தேர்வறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டிருந்ததால் அச்சப்பட வேண்டாம் என கூறியிருக்கிறது.

கடாக் மாவட்டம் லக்ஷ்மேஸ்வரா என்ற பகுதியில் வியாழக்கிழமை தேர்வு எழுதிய மாணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் தொடர்புடைய 19 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஹாசன் மாவட்டத்தில் பாட்டிக்கு கொரோனா உறுதியானதால் பேரன் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேற்கு பெங்களூருவில் உள்ள தேர்வு மையத்தில் இருந்து 80 அடி தூரத்தில் உள்ள வீடு ஒன்றில் கொரோனா உறுதியானதால் அங்கே தேர்வு எழுதிய 389 பேர் அச்சத்தில் இருக்கிறார்கள். இது தவிர்த்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்கள் 57 பேரில் 25 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

அடுத்த மாதம் சிறப்புத் தேர்வு நடத்தப்படும் என கர்நாடக அரசு கூறியுள்ளது. இப்படி கொரேனா அச்சத்திற்கு மத்தியில் 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதி வந்தாலும், 97.93 விழுக்காடு மாணவர்கள் தேர்வுக்கு வந்துள்ளதாக கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் கூறியுள்ளார்.

No comments