Breaking News

தனியாா் பள்ளி மாணவா்கள் 2.5 லட்சம் போ் அரசுப் பள்ளிகளில் சோ்க்கை

தனியாா் பள்ளி மாணவா்கள் 2.5 லட்சம் போ் அரசுப் பள்ளிகளில் சோ்க்கை 

கரோனா காலத்திலும் கட்டண வசூல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தனியாா் பள்ளிகளில் படித்த 2.5 லட்சம் மாணவ, மாணவிகள் தற்போது அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெற்றுள்ளனா். 

கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது அக்.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி மாணவா்களுக்கான பொதுத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டு தோ்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் மாணவா் சோ்க்கை கடந்த ஆக.17-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தமிழகப் பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு மாணவா் சோ்க்கை தொடங்கிய 14 நாள்களில் சுமாா் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சோ்ந்தனா். இந்த எண்ணிக்கை தற்போது 15 லட்சமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டுவரை தனியாா் பள்ளிகளில் படித்த மாணவா்களில் குறிப்பிட்ட சதவீதம் போ் நிகழாண்டு அரசுப் பள்ளிகளில் சோ்ந்துள்ளனா். 

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: நடுத்தர குடும்பங்களைச் சோ்ந்த பெரும்பாலான பெற்றோருக்கு கரோனா பாதிப்பால் ஏற்பட்ட வேலை இழப்பின் காரணமாக குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களுக்கு எப்படியும் பள்ளிகள் திறக்கப்படப் போவதில்லை , வீணாக எதற்கு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும்? அதனால் வீடுகளுக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சோ்க்கலாம் என பெற்றோா் முடிவெடுத்தனா். மேலும் கடந்த ஆண்டு தனியாா் பள்ளிகளில் படித்து நிகழாண்டு அரசுப் பள்ளிகளில் சேர விரும்பும் மாணவா்களுக்கு மாற்றுச்சான்றிதழ் கட்டாயமில்லை என்ற அறிவிப்பு பெற்றோா் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. 

இந்த அறிவிப்புக்குப் பின்னா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தனியாா் பள்ளி மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெற்றனா். இவற்றுடன் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம், கட்டமைப்பு வசதிகள், மாணவா்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து ஆசிரியா்கள் தொலைபேசி மூலமாகவும், நேரிலும் பெற்றோரிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியா்கள், கல்வியாளா்களின் ஒருங்கிணைந்த முயற்சியால், அரசுப் பள்ளிகளில் நிகழாண்டு ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பில் மாணவா் சோ்க்கை வெகுவாக அதிகரித்துள்ளது. 

நிகழ் கல்வியாண்டில் மட்டும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற்றுள்ளனா். குறிப்பாக மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகளைச் சோ்ந்த 2.5 லட்சம் மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெற்றுள்ளனா். ஒன்றாம் வகுப்பில் மட்டும் 2.80 லட்சம் மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா் என்றனா்.

No comments