Breaking News

எள்ளு சாப்பிட்டால் இந்த நோய்களில் இருந்து தப்பிக்கலாம்

எள்ளு சாப்பிட்டால் இந்த நோய்களில் இருந்து தப்பிக்கலாம்
எள்ளு மிட்டாய், எள்ளு உருண்டை, எள்ளு பொடி இப்படி பலவிதத்தில், சிறு வயதிலேயே எள்ளை அதிகம் விரும்பி சாப்பிட்டிருப்போம். பொதுவாகவே, இந்த இனிப்பு வகைகள் நமக்கு ரொம்ப பரிச்சயமான உணவுகளாக இருந்தது. இதை சாப்பிட்டதால், வகை வகையான நோய்களில் இருந்து தப்பித்தோம்.

முக்கியமாக, எள்ளு சாப்பிடுவதால், புற்றுநோய் வராமல் இருக்கும். அதுமட்டுமின்றி, புற்றுநோய் வந்தவருக்கு இது அருமருந்தாக இருப்பதாகவும், இப்போதைய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

எந்த ஒரு பலகாரத்திலும் கொஞ்சம் எள்ளை சேர்த்து சமைக்கும் பழக்கத்தை, கொண்டிருந்தனர், நம் முன்னோர். உதாரணத்துக்கு, முறுக்கு, சீடை, ஓட்டை வடை, எள்ளு உருண்டை என, இப்படி விதவிதமான பண்டங்களில் எள்ளை சேர்க்கும் பழக்கம், அன்று முதல் இன்று வரை கடைப்பிடித்து வருகிறோம்.
எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளில் எள்ளும் ஒன்று. இதில், 'ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஒமேகா 3' கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின், 'ஏ, பி' போன்றவை உள்ளன. இதை சரியான அளவில் எடுத்துக் கொண்டால், பலன் முழுமையாக கிடைக்கும்.

தாய்லாந்தில் உள்ள, சியாங் மாய் யூனிவர்சிட்டி, புற்றுநோய் மற்றும் எள் பற்றிய ஆராய்ச்சியில், பல தகவல்களை வெளியிட்டது. அதில், 'கருப்பு எள், புற்றுநோய் செல்களை உருவாக விடாமல் தடுக்கும்; மூளை செல்களை மறு உற்பத்தி செய்யும்' என குறிப்பிட்டுள்ளது.

புற்றுநோய் வரவிடாமல் நம்மை காப்பதற்கு மிக முக்கிய காரணம், 'சீசமின்' என்ற மூலக்கூறு தான். இது, எள்ளில் உள்ள முக்கிய மூல பொருள் ஆகும். மற்ற தாதுக்களை காட்டிலும் இந்த வேதி பொருள், எதிர்ப்பு சக்தியை துாண்டி, நேரடியாக புற்றுநோய் செல்களை தடை செய்கிறது. இவை, ஆண்கள் - பெண்கள் என, இருவிதமாக அதன் பயனை பிரித்து தருகிறது.

பெண்கள் தினமும் எள் சாப்பிடுவதால், மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கப்படும். அத்துடன், ரத்த நாளங்களில் புற்றுநோய் செல்கள் வளர விடாமல் பாதுகாப்பதாக, தாய்லாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மார்பக புற்றுநோய் மட்டுமின்றி, பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் போன்றவற்றையும் இது தடுக்கிறது. குடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றி, சுத்தமாக வைக்கிறது.

வெள்ளை எள்ளை விட, கருப்பு எள்ளில் தான் ஊட்டச்சத்துகளும், தாதுக்களும் அதிகம் உள்ளது. எள்ளில், இரும்பு சத்து, வைட்டமின், 'ஏ, பி' ஆகியவை நிறைந்துள்ளதால், இளம் நரையை தடுக்கும். மேலும், முடி உதிர்தல், ஞாபக மறதி போன்ற பிரச்னைகள் தீரும்.

இதை சாப்பிடுவதால், உடலில் சேர்ந்துள்ள கழிவுகள் எளிதாக வெளியேறி விடும். முக்கியமாக, செரிமான கோளாறு உள்ளோர், தினமும், அரை தேக்கரண்டி எள் சாப்பிடுவது சிறந்தது. உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நல்லது. குறிப்பாக, அரிசி அல்லது ஓட்ஸ்சுடன் சேர்த்து சாப்பிட்டால், முழு பலன் கிடைக்கும்.

உடலில் ஏதேனும் நோய் உள்ளோர், மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிடுவது நல்லது. அதேபோல், நல்லெண்ணையில், 'சீசேமோலின்' எனும் வேதிப் பொருள் நிறைந்துள்ளது. எனவே, இதை உணவில் அதிகம் சேர்க்கும்போது, இதயத்திற்கு பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.

நல்லெண்ணையில், துத்தநாகம் எனும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது; இது, எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும். எனவே, எலும்புகள் வலுவுடன் இருக்க, கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணையையும் சாப்பிடுவது நல்லது. அதிலும், நல்லெண்ணையை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிக நல்லது.

நல்லெண்ணையில் இருக்கும் மக்னீசியம், ரத்த அழுத்தத்தை குறைக்க, பெரிதும் உதவுகிறது. அதிலும், நீரிழிவு நோயாளிகளுக்கு, உயர் ரத்த அழுத்தம் இருந்தால், அவர்கள் நல்லெண்ணை சாப்பிடுவது, நல்ல பலனை தரும்.

தினமும் காலையில், நல்லெண்ணையால் வாயை கொப்பளித்தால், சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.

No comments