Breaking News

100 ரூபாய் நோட்டு இனி செல்லாதா? 5, 10, 100 ரூபாய் நோட்டுகளை மாற்றுகிறதா RBI?

100 ரூபாய் நோட்டு இனி செல்லாதா? 5, 10, 100 ரூபாய் நோட்டுகளை மாற்றுகிறதா RBI?
RBI Latest News: ரிசர்வ் வங்கி (RBI) உதவி பொது மேலாளர் பி மகேஷ் அளித்த ஒரு அறிக்கை முன்பு நடந்த பணமதிப்பிழப்பை நினைவூட்டியது. 5, 10 மற்றும் 100 ரூபாய் பழைய நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டத்தை ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக பி மகேஷ் தெரிவித்துள்ளார். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், அதை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் RBI அறிவிக்கக்கூடும்.

100 ரூபாய் நோட்டு இனி இருக்காதா?

போலி நோட்டுகளின் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக அவ்வப்போது, ​​ரிசர்வ் வங்கி (Reserve Bank) பழைய தொடர் கரன்சி நோட்டுகளை நிறுத்தி புதிய நோட்டுகளை கொண்டு வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட அறிவிப்புக்குப் பிறகு நிறுத்தப்படும் பழைய நோட்டுகள் அனைத்தும் வங்கியில் டெபாசிட் செய்யப்பட வேண்டும். டெபாசிட் செய்யப்பட்ட மொத்த நோட்டுகளின் மதிப்பிலான பணத்தை வங்கி உங்கள் கணக்கில் மீண்டும் பரிமாற்றம் செய்யும், அல்லது புதிய நோட்டுகளாக வங்கி மாற்றிக்கொடுக்கிறது.

பழைய 100 ரூபாய் நோட்டும் தொடரும்

2 ஆண்டுகளுக்கு முன்பு, ரிசர்வ் வங்கி 100 ரூபாயின் புதிய நோட்டுகளை வெளியிட்டது. 100 ரூபாயின் புதிய நோட்டுகள் ஆழமான வயலட் நிறத்தில் உள்ளன. இதில் வரலாற்று தளமான ராணி கி வாவிற்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இது ராணி கி பாவடி என்றும் அழைக்கப்படுகிறது. ராணி கி வாவ் குஜராத்தின் படான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. UNESCO நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இடத்தை உலக பாரம்பரிய தளங்களின் வரிசையில் சேர்த்தது. UNESCO வலைத்தளத்தின்படி, ராணி கி வாவ் சரஸ்வதி நதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய நோட்டுகளின் வெளியீட்டிற்குப் பிறகும், பழைய 100 ரூபாய் நோட்டுகளும் (100 Rupee Note) தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று பி. மகேஷ் கூறினார். அவையும் செல்லக்கூடிய ரூபாய் நோட்டுகளாகவே கருதப்படும்.

10 ரூபாய் நாணயங்களால் ரிசர்வ் வங்கிக்கு தலைவலி

10 ரூபாய் நாணயங்கள் ரிசர்வ் வங்கிக்கு (RBI) தலைவலியாகிவிட்டன. 10 ரூபாய் நாணயங்கள் 15 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டன. ஆனால் கடைக்காரர்களும் வணிகர்களும் இன்றும் அதை வாங்க மறுத்து வருகின்றனர். அதன் செல்லுபடியாகும் தன்மை குறித்து அவ்வப்போது வதந்தி பரவி வருகிறது. இதன் காரணமாக, 10 ரூபாய் நாணயங்கள் மலை போல் ரிசர்வ் வங்கியிடம் குவிந்துள்ளன.

இது குறித்து ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் பி.மகேஷ் கூறுகையில், 10 ரூபாய் நாணயம் குறித்து அனைத்து வங்கிகளும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். இந்த நாணயத்தின் பயன்பாட்டை நிறுத்துவதற்கான யோசனை எதுவும் இல்லை என்பதையும் போலி நாணயங்களுக்கான எந்த சிக்கலும் தற்போது இல்லை என்பதையும் வங்கிகள் மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 10 ரூபாய் நாணயம் முன்பைப் போலவே புழக்கத்தில் தொடரவும் வங்கிகள் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

No comments