Breaking News

தலைமையாசிரியர்களுக்கு ஏப்ரல் 30ம் தேதிக்குள் கலந்தாய்வு நடத்த உத்தரவு

     தலைமை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை ஏப். 30க்குள் நடத்தவும், இதன்பிறகு பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தவும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு கடந்த 2020க்கான பொது மாறுதல் கலந்தாய்வு கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது.

   தற்போது பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்துவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தினால் பலருக்கு உரிய இடம் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே, இந்தப் பணிகளுக்கான பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த தடை விதிக்க வேண்டும். பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திய பிறகு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கூறி பலர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர். இதை ஏற்கனவே விசாரித்த நீதிபதி, பதவி உயர்வு கலந்தாய்வுக்கு இடைக்கால தடை விதித்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

   மனுக்களை விசாரித்த நீதிபதி, துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் மற்றும் வட்டார கல்வி அலுவலர் பணிக்கான பொது மாறுதல் கலந்தாய்வை ஏப். 30க்குள் நடத்த வேண்டும். இதன்பிறகு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.




No comments