Breaking News

+2 பொதுத் தேர்வு ரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்


தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்ததோடு இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்றும் தெரிவித்துள்ளது. கடந்த ஜுன் 1ம் தேதி சிபிஎஸ்இ ப்ளஸ் 2 தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்ததை தொடர்ந்து தமிழ்நாடு அரசும் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்யப்படுவதாக கடந்த 5ம் தேதி அறிவித்தது. மதிப்பெண்களை வழங்குவது தொடர்பான வழிமுறைகளை வெளியிட குழு ஒன்றையும் அரசு அமைத்தது.


இந்த நிலையில், 12வகுப்புத் தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்து பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. கடந்த ஆண்டு தேர்வு எழுதாமல் 11ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தான் இந்த ஆண்டும் பிளஸ் 2 பயின்று வருவதாக மனுதாரர் சுட்டிக் காட்டினார். தற்போது பெரும்பாலான பள்ளிகளில் வகுப்புகள் முழுமையாக நடைபெறாத சூழலில் யூஜிசி, மெடிக்கல் கவுன்சில்,ஏஐசிடிஇ, நர்சிங் கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகளோடு கலந்து ஆலோசிக்காமல் பிளஸ் 2 தேர்வை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ரத்து செய்து இருப்பதாக அவர் புகார் தெரிவித்தார். எனவே 2 மாதங்களுக்கு பிறகு பிளஸ் 2 தேர்வு நடத்த உத்தரவிட அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி அமர்வு பிளஸ் 2 தேர்வு ரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் இடைக்கால தடை விதிக்க முடியாது என்றும் தெரிவித்தனர். மனு மீது பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 3ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments