Breaking News

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியலில் நடிகையின் புகைப்படம் இடம்பெற்றுள்ளதால் சர்ச்சை

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியலில் நடிகையின் புகைப்படம் இடம்பெற்றுள்ளதால் சர்ச்சை

பீகாரில் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியலில், பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதித் தேர்வு, கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதற்கான முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டன. அதில் சில தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக உருது, சமஸ்கிருதம் மற்றும் அறிவியல் ஆகிய 3 பாடங்களின் மதிப்பெண்கள் வெளியிடப்படாமல் இருந்தது.

அவை தற்போது சரி செய்யப்பட்டு அரசு இணையதளத்தில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரிஷிகேஷ் குமார் என்ற மாணவர் உருது, சமஸ்கிருதம், அறிவியல் அடங்கிய, முதல் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இணையதளத்தில் அந்த மாணவரின் பதிவு எண், மதிப்பெண் என, அனைத்து விபரங்களும் சரியாக உள்ளன. ஆனால், ரிஷிகேஷின் படத்துக்கு பதிலாக, மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத்தொடர்ந்து பீகார் ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடுகள் நடத்துள்ளதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டத் துவங்கியுள்ளனர். ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான பீகார் பொது சுகாதார பொறியியல் துறையின் தகுதிப் பட்டியலில், இந்தி நடிகை சன்னி லியோனின் புகைப்படம் தவறுதலாக இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது

No comments