Breaking News

அவநம்பிக்கையை போக்குவீர் - அட்மிஷன் கூடும் அரசுப் பள்ளிகள் - தனியார் பள்ளிகளின் நிலை

அவநம்பிக்கையை போக்குவீர் - அட்மிஷன் கூடும் அரசுப் பள்ளிகள் - தனியார் பள்ளிகளின் நிலை


கொரோனா பேரிடர் காரணமாக 2020-ம் ஆண்டு முதல் பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், பல தனியார்ப் பள்ளிகளில் மாணவர்களின் பள்ளிக் கட்டணத்தை முழுமையாகச் செலுத்த வேண்டும் எனச் சொல்லப்பட்டது. ஏன் கட்டாயப்படுத்தப்பட்டது என்றே சொல்லலாம். லாக்டவுன் காரணமாக பலர் தங்கள் வேலையை இழந்து, வருமானம் இல்லாமல் இருந்ததால் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டது. இந்தச் சூழலைச் சமாளிக்கவும், குழந்தைகளின் எதிர்காலத்தைக் காக்கவும் முடிவு செய்த பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளையே நாடினர். இதன் காரணமாக லட்சக்கணக்கான பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.



கடந்த கல்வி ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை, அதற்கு முந்தைய இரண்டு கல்வி ஆண்டுகளைக் காட்டிலும் அதிகரித்தது. அதாவது 2018-19ம் கல்வி ஆண்டில் 8,000 மாணவர்களும், 2019-20ம் கல்வி ஆண்டில் 10,000 மாணவர்களும் கூடுதலாக அரசுப் பள்ளிகளில் சேர்ந்தனர். அதுவே 2020-21ஆம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் 12-ஆம் வகுப்பு வரை வழக்கத்தைக் காட்டிலும் 1 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளைத் தேர்வு செய்தனர். வழக்கமாக 12 லட்சம் மாணவர்கள் சேரும் நிலையில், அது கடந்த கல்வியாண்டு 13 லட்சமாக அதிகரித்தது. அதுவே இந்த ஆண்டு கூடுதலாக 10 லட்சம் மாணவ, மாணவிகள் சேர வாய்ப்பு உள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசுப் பள்ளிகள் Vs தனியார்ப் பள்ளிகள்!


தமிழகத்தைப் பொருத்தவரை 37,459 அரசுப் பள்ளிகளும், 8,386 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 12,918 தனியார்ப் பள்ளிகளும் உள்ளன. அரசுப் பள்ளியில், 2019-20ம் கல்வி ஆண்டில் 45,83,000 மாணவர்களும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 28,44,693 மாணவர்களும், தனியார்ப் பள்ளிகளில் 62,80,000 மாணவர்களும் உள்ளனர். இந்த எண்ணிக்கையில், கடந்த 2018-2019-ம் கல்வியாண்டைக் காட்டிலும், 2019-2020-ம் கல்வியாண்டில், தனியார்ப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்தும், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தும் காணப்படுகிறது. கடந்த 2020-2021ம் கல்வியாண்டில் தனியார்ப் பள்ளியிலிருந்து சுமார் 2.80 லட்சம் பேருக்கும் அதிகமானோர் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments