Breaking News

பள்ளிகள் திறப்பு குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களுடன் இன்று ஆலோசனை

பள்ளிகள் திறப்பு குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களுடன் இன்று ஆலோசனை
தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறப்பது மற்றும் அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்துவது குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ், இன்று ஆலோசனை நடத்துகிறார்.

நாடு முழுதும், அனைத்து வகை வகுப்புகளையும், குறிப்பாக தொடக்க பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்துமாறு, இந்திய மருத்துவ கவுன்சிலான, ஐ.சி.எம்.ஆர்., அறிவுறுத்தியுள்ளது.


அதனால், வரும் 1ம் தேதி பள்ளிகளை திறந்து, ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளை நடத்த, தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.இது குறித்தும், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்துவது குறித்தும், பள்ளி கல்வி அதிகாரிகளுடன், அமைச்சர் மகேஷ் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகத்தில், இன்று காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை கூட்டம் நடக்க உள்ளது.அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், சில மாவட்ட கல்வி அலுவலர்களும், பள்ளி கல்வி இயக்குனர்கள், இணை, துணை இயக்குனர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

பள்ளி கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா, கமிஷனர் நந்தகுமார் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்று, அதிகாரிகளின் ஆலோசனைகளை கேட்க உள்ளனர்.இதற்கிடையில், செப்., 1ல் பள்ளிகளை திறந்து, நேரடி வகுப்புகள் நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை, பள்ளி கல்வித்துறை தயார் செய்துள்ளது.

No comments