Breaking News

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு: தமிழகத்திலிருந்து 1.12 லட்சம் பேர் விண்ணப்பம்

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS, BDS, சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு NEET தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்தியாவிலும், வெளிநாட்டிலும் 13 மொழிகளில் நடைபெறும் நீட் தேர்வை எழுத நாடு முழுவதும் 16 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் 1.12 லட்சம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 100 க்கும் மேற்பட்ட மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள 1,12,889 பேரில் 71,745 மாணவியர், 41,144 மாணவர்கள் ஆவர். இந்த ஆண்டில் 19,867 மாணவர்கள் நீட் தேர்வை தமிழில் எழுத விண்ணப்பித்துள்ளனர். இதில் 11,236 மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் இருந்து விண்ணப்பித்துள்ளனர். சென்னையில் 33 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. மையங்கள் அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. நாளை பகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தமுறை கூடுதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

தேர்வுக்கான ஹால் டிக்கெட் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், ஹால் டிக்கெட், அடையாள அட்டை, புகைப்படம் தவிர வேறு எதையும் தேர்வு மையத்துக்குள் எடுத்து செல்லக்கூடாது என்று தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தி உள்ளது. இந்த ஆண்டில், +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாலும், கடந்த கல்வியாண்டில் மாணவர்களின் சுமையைக் குறைக்க பாடத்திட்டம் குறைக்கப்பட்டதாலும், நீட் தேர்வு வினாத்தாளிலும் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments