Breaking News

அரியர் தேர்வு ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை அமல்படுத்தப்படவில்லை - தமிழக அரசு தகவல்

அரியர் தேர்வு ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை அமல்படுத்தப்படவில்லை - தமிழக அரசு தகவல்
அரியர் தேர்வு ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை அமல்படுத்தப்படவில்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கல்லூரித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதில் அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியும், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தனும் உயர்நீதிமனத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு முதலில் விசாரணைக்கு வந்தபோது அரியர் தேர்வு எழுதக் கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்ற அரசு உத்தரவை ஏற்றுக் கொள்ள இயலாது என்று தெரிவித்த நீதிபதிகள், ஏதேனும் தேர்வு நடைமுறையை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்கள். பின்னர் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரியர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் எனவும், அந்த தேர்வை எழுதாதவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படமாட்டார்கள் எனவும் தமிழக அரசு தெரிவித்தது. இதை ஏற்ற நீதிமன்றம் 8 வாரத்திற்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் இதுகுறித்த அறிக்கையை ஜூலை 2வது வாரத்திற்கு பிறகு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வுமுன்பு விசாரணைக்கு வந்தபோது, அரியர் தேர்வு ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை அமல்படுத்தப்படவில்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அரசாணை அமல்படுத்தப்படவில்லை என்பதால் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை எனவும், தேர்வு எழுதாமல் எந்த மாணவருக்கும் சான்றிதழ் வழங்கக்கூடாது எனவும் தெரிவித்து வழக்கை முடித்துவைத்தனர்.

No comments