Breaking News

தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது

     தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.  நேற்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: 

   இதுவரை 2726 பேருக்கு மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 234 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 77,330 பேர் வீட்டு கண்காணிப்பிலும் 81 பேர் அரசு முகாம்களிலும் உள்ளனர். 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டு கண்காணிப்பில் இருந்து வெளியே வந்தவர்கள் எண்ணிக்கை 4070. தமிழகத்தில் 17 இடங்களில் பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இதில் 6 மையங்கள் தனியாரும், 11 ஆய்வகங்கள் அரசுடையதும் ஆகும்.

   தமிழகத்தில் இன்று மட்டும் 110 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். இதில் ஒருவர் பர்மாவைச் சேர்ந்தவர், ஒருவர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர். மற்றவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதன் மூலமாக ஏற்கனவே தமிழகத்தில் கரோனா பாதிப்பு 124 ஆக இருந்த நிலையில், தற்போது 234 ஆக அதிகரித்துள்ளது. 

தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் நேற்று 80 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 110 பேரையும் சேர்த்து மொத்தமாக தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் 190 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் கோரிக்கையை ஏற்று, தில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் 1,103 பேர் தானாக முன்வந்து தகவல் தெரிவித்துள்ளனர் . எஞ்சியுள்ளவர்களும் தமிழக அரசை தொடர்பு கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இந்த 1,103 பேரில் 658 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளோருக்கு மாதிரிகள் எடுக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.


No comments