Breaking News

ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிகளை திறக்க வலியுறுத்தல்

ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிகளை திறக்க வலியுறுத்தல்
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. எனினும், கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. இதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து, பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டன. அதன்பின்னர், மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் எடுக்கப்பட்டு வந்தது.


மேலும் 1 முதல் 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஆல் பாஸ் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதே போல், கொரோனா இரண்டாவது அலை தீவிரம் காரணமாக 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. 10 மற்றும் 11ம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது.


ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தாலும், பள்ளிகள் திறப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனினும், நிர்வாக பணிகளுக்காக மட்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை படிப்படியாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரைமரி, நர்சரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் நந்தகுமார் வலியுறுத்தி உள்ளார். முதலில், 10 மற்றும் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்கலாம் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார். மேலும், ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிகளை திறக்க அரசை வலியுறுத்தியுள்ள அவர், அரசின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments