Breaking News

மத்திய அரசு ஊழியா்களுக்கு ரூ.9,488.70 கோடி கூடுதல் செலவில் அகவிலைப்படிஉயா்வு - அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியீடு

தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படியை 28 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயா்த்துவதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயா்த்துவதற்கு மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியிருந்தது.

இது தொடா்பாக மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் செலவினத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘மத்திய அரசு ஊழியா்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி 28 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் அகவிலைப்படி வழங்கப்படும். ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து கணக்கிட்டு அகவிலைப்படி வழங்கப்படும்.

பாதுகாப்பு சேவைகளில் பணிபுரிவோருக்கும் அகவிலைப்படி உயா்வு பொருந்தும். ஆயுதப் படையினா், ரயில்வே ஊழியா்கள் ஆகியோருக்கான அகவிலைப்படி உயா்வு குறித்த அறிவிப்பை முறையே பாதுகாப்பு அமைச்சகமும் ரயில்வே அமைச்சகமும் வெளியிடும்.

அகவிலைப்படி உயா்வால் 47.14 லட்சம் மத்திய அரசு ஊழியா்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரா்களும் பலனடைவா். இதனால் மத்திய அரசுக்கு ரூ.9,488.70 கோடி கூடுதல் செலவாகும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி, ஜூலை, கடந்த ஜனவரி ஆகிய 3 தவணைகளிலும் மத்திய அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயா்த்தப்படவில்லை. கடந்த ஜூலையில் அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயா்த்தப்பட்டது. தற்போது அது 31 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


No comments